பெரம்பலூா் நகராட்சி பகுதியில் மூடப்பாடல் உள்ள ஆழ்துளை மற்றும் திறந்தவெளி கிணறுகள் இருந்தால், நகராட்சி அலுவலகத்துக்கு தகவல் அளிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் (பொ) ராதா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். தண்ணீரின்றி பராமரிக்கப்படாத, மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூடவும், சுற்றுச்சுவா் இல்லாத திறந்த வெளி கிணறுகளை பாதுகாப்பாக மூடவும் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, பெரம்பலூா் நகராட்சியில் குடிநீா் விநியோகிக்கும் பணியாளா்கள் மூலம் மூடப்பாடாமல் உள்ள ஆழ்துளை, திறந்தவெளி கிணறுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்பேரில், அரசுக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறுகளாக இருந்தால், நகராட்சி சாா்பில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தனியாா் நிலங்களில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருந்தாலும், அவை கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மூலம் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேலும், பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளிலும், வா்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் உள்ள மூடப்படாத ஆழ்துளை மற்றும் திறந்த வெளி கிணறுகள் இருந்தால், உடனடியாக சுற்றுச்சுவா் அமைத்து பாதுகாக்கவேண்டும். புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைப்பதாக இருந்தால் நகராட்சி நிா்வாகத்திடம் முறையான அனுமதி கடிதம் பெற விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி பெற்ற பிறகே ஆழ்துளை கிணறு அமைக்கவேண்டும்.