பெரம்பலூர் அருகே, கொட்டரை நீர்த்தேக்கத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக விவசாயிகள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரலக சிறுவர் பூங்கா அருகே புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் பி. மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் மணி முன்னிலை வகித்தார். மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் பெற தேவையான பட்டா மாறுதல் சான்று, வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் கொட்டரை நீர்த்தேக்கத் திட்டம் செயல்படுத்த அரசாணை பிறப்பித்து 4 ஆண்டுக்கு மேலாகியும், இதுவரை அத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட, பாதை அமைத்திட கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தி, தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். 30 நாள்களுக்குள் இப்பிரச்னையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுமக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க நிர்வாகிகள் துரைராஜ், விஜய. மனோகர், அழகுமுத்து, சுந்தர்ராஜன், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.