பெரம்பலூர் மாவட்டம், பேரளி அருகே வெள்ளிக்கிழமை இரவு மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 லாரி பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநர், உரிமையாளரை கைது செய்தனர்.
பேரளி கிராம நிர்வாக அலுவலர் அகிலனுக்கு கிடைத்த தகவலின் பேரில், பெரம்பலூர்- அரியலூர் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த லாரியை சோதனையிட்டபோது, அனுமதியின்றி 9 யூனிட் மணல் திருடி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் ஓமலூரைச் சேர்ந்த நடராஜன், உரிமையாளர் பழனிச்சாமி (52) ஆகியோரை கைது செய்து, மணல் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். இதேபோல, குன்னம் அருகேயுள்ள ஒதியம் பிரிவு சாலையில் ஒதியம் கிராம நிர்வாக அலுவலர் பூர்ணிமா தலைமையிலான வருவாய்த் துறையினர் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த லாரியை சோதனையிட்டபோது, அனுமதியன்றி 7 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து மணல் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.