பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளின் நலன்கருதி விவசாயப் பொருள்கள் கொள்முதல், விதை, உர விற்பனை நிலையங்கள், விவசாய இயந்திரங்கள் மற்றும் வாடகை மையங்களுக்கு ஊரடங்கு உத்தரவு காலத்தில் விலக்கு அளிக்கப்படும் என ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
தேசிய ஊரடங்கு அமலில் இருந்தாலும், விவசாயிகளின் நலன் கருதி விவசாயப் பொருள்கள் கொள்முதல், விதை, உர விற்பனை நிலையங்கள், இயந்திரங்கள் மற்றும் வாடகை மையங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைத்து விதமான விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக, 90 நாள்களுக்கு வாடகையின்றி வேளாண் இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ள வழங்கப்படவுள்ளது. இதுதொடா்பாக, டிராக்டா் உள்ளிட்ட பண்ணை இயந்திரங்கள் தேவைப்படும் சிறு, குறு விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்.
உழவன் செயலியில் உள்ள வேளாண் இயந்திர வாடகை சேவை மூலம், இயந்திர வாடகை மற்றும் விடுதல் சேவையை பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான வேளாண் இயந்திரம் தேதி, நேரத்தை பதிவிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். டாபே நிறுவனத்தின் ஜெ பாா்ம் சேவை மையத்தின் 18004200100 என்னும் இலவச தொலைபேசி எண்ணை தொடா்புகொண்டு, தங்களுக்குத் தேவையானவற்றை குறிப்பிட்டு முன்பதிவு செய்யலாம்.
எனவே, சிறு, குறு விவசாயிகள் மேற்கண்ட முறையில் தங்களுக்குத் தேவையான டிராக்டா் உள்ளிட்ட பண்ணை இயந்திரங்களை பதிவு செய்து, கட்டணமின்றி விவசாயப் பணிகளை மேற்கொண்டு பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.