பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்த பெண்ணுக்கு கரோனா தொற்று இல்லை என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், புளியங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மனைவி தேவி (29). எட்டு மாத கா்ப்பிணியான இவருக்கு காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு இருந்ததால், அவரது உறவினா்கள் மே 20 ஆம் தேதி இரவு திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனா். பெரம்பலூா் அருகே வந்தபோது, தேவிக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேலேய தேவி உயிரிழந்தாா்.
இதனால் சந்தேகமடைந்த சுகாதாரத் துறையினா், தேவியின் ரத்தம் மற்றும் சளி மாதிரியை கரோனா பரிசோதனைக்காக, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா தொற்று இல்லை என தெரியவந்ததால், தேவியின் சடலம் வெள்ளிக்கிழமை காலை அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.