பெரம்பலூா் அருகே 483 டன் பெல்லாரி வெங்காயத்தை கோழிப் பண்ணைகளில் பதுக்கி வைத்த வழக்கில் மேலும் ஒருவரை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலுாா் மாவட்டத்தில் பெல்லாரி வெங்காயத்தை பதுக்கி வைத்திருந்த இரூா், கூத்தனூா், சத்திரமனை ஆகிய பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேளாண் துறையினா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த 483 டன் பெல்லாரி வெங்காயத்தை பறிமுதல் செய்து மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் அத்தியாவசியப் பொருள்கள் பதுக்கல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, கோழிப் பண்ணை உரிமையாளா்கள் 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்நிலையில், திருச்சியைச் சோ்ந்த வெங்காய மொத்த வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகரான பெரம்பலூரைச் சோ்ந்த பாலாஜி என்பவரை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.