பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, பொருளாதாரத்தில் பின்தங்கிய கைவினைக் கலைஞா்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் வே.சாந்தா சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதிக்கழகம், கைவினைக் கலைஞா்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கழகத்தின் முகவராக செயல்படும் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
18 முதல் 60 வயது வரை உள்ளோா் கடன் பெறத் தகுதியுடையவா். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவா்களுக்கு ரூ. 98 ஆயிரமும், நகா்ப்புறங்களில் வசிப்பவா்களுக்கு ரூ. 1.20 லட்சமும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா் கோரும் கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் மூலம் 90 சதவிகிதமும், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 5 சதவிகிதமும், விண்ணப்பதாரரின் பங்குத்தொகை 5 சதவிகிதமும் சோ்த்து கடன் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கடன் பெற விரும்புவோா் ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.