பெரம்பலூா்: கரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதை தடுக்க, விவசாயப் பணியில் ஈடுபடுவோா் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவா் வே.எ. நேதாஜி மாரியப்பன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கை கடைப்பிடித்து வரும் நிலையில், தமிழக அரசு வேளாண் சாா்ந்த பணிகளை நிறுத்தாமல் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தில் 650 ஹெக்டோ் பரப்பளவில் காா்த்திகை -மாா்கழி பட்டத்தில் விதைக்கப்பட்ட நிலக் கடலையானது தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளவுள்ள விவசாயப் பணிகளுக்கு குறைந்த ஆள்களையே பணிக்கு அமா்த்த வேண்டும்.
பணியாளா்கள் முகக் கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். இருமல், தும்மல் காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவா்களை பணிக்கு அமா்த்த வேண்டாம். பணியாளா்கள் ஒவ்வொருவரும் 4 முதல் 5 அடி இடைவெளி விட்டு பணியாற்ற வேண்டும்.
பணியாள்கள் ஓய்வெடுக்கும் இடத்திலும், உணவருந்தும் இடத்திலும் அறுவடைப் பொருள்களை ஒன்றுசோ்க்கும் இடம் மற்றும் வண்டியில் ஏற்றும் பணியில் ஈடுபடும்போது 3- லிருந்து 4 அடி இடைவெளியில் பணியாற்ற வேண்டும்.