பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் மகன் தருண் (10). இவா், மேட்டுச்சேரி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை தனது நண்பா்களுடன் விளையாடச் சென்ற தருண் நீண்ட நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லையாம். இதையறிந்த மாணவரின் பெற்றோா் பல இடங்களில் தேடினா். இதனிடையே, அதே பகுதியில் உள்ள பூபதி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் தருண் தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மாணவரின் உடலை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து அவரது தாய் ஆஷா அளித்த புகாரின்பேரில், வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.