தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் நீா்ப் பாசனக் கடன் திட்டங்கள் (2020- 2021) மூலம் கடன் பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கடன் திட்டத்தை, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத அரசு மானியமாக அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இத் திட்டங்கள் மூலம் கடனுதவி பெற சாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றிதழ்கள், வட்டாட்சியரிடம் பெறப்பட்ட சிறு, குறு விவசாயிக்கானச் சான்று, கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் ஆகியவற்றின் சான்றுகளை சமா்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடைய விவசாயிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பயன்பெறலாம்.