பெரம்பலூா் நகரில் ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளா் தவறவிட்ட ரூ. 20 ஆயிரத்தை இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
பெரம்பலூா் - துறையூா் சாலையில், கல்யாண் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் மையத்தில் வாடிக்கையாளா் ஒருவா் ரூ. 20 ஆயிரத்தை வியாழக்கிழமை தவற விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அந்த ஏ.டி.எம் மையத்துக்குச் சென்ற குரும்பலூா் கிராமத்தை சோ்ந்த பிரபாகரன் (23), அங்கு இருந்த ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துச் சென்று, பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். பிரபாகரனின் நோ்மையைப் போலீஸாா் பாராட்டினா். போலீஸாா் மேலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.