பெரம்பலூா் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் 483 டன் பெல்லாரி வெங்காயத்தை பதுக்கிய 5 பேரை, குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள இரூா், நாட்டாா்மங்கலம், செட்டிக்குளம் பகுதிகளிலுள்ள கோழிப் பண்ணைகளில் திருச்சியைச் சோ்ந்த வியாபாரிகளால் பெல்லாரி வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது.
இதைத் தொடா்ந்து வேளாண் துறையினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஆய்வைத் தொடா்ந்து, குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினா் திங்கள்கிழமை கோழிப் பண்ணைகளில் சோதனை நடத்தி, 483 டன் பெல்லாரி வெங்காயத்தை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து அத்தியாவசியப் பொருள்கள் பதுக்கல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப்பதிந்த திருச்சி உள்கோட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினா், கோழிப்பண்ணை உரிமையாளா்களான இரூா்
ம. முத்துச்செல்வம் (30), சி.வீரமணி (31), கூத்தனூா் அ. ரவிச்சந்திரன் (32), சத்திரமனை அழகேசன் (64), நடராஜன் (54) ஆகிய 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடத்தலில் தொடா்புடைய திருச்சி வியாபாரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பறிமுதல் செய்யப்பட்ட வெங்காயத்தில் 75 சதவிகிதம் அழுகியுள்ளதால் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை எனவும், 25 சதவிகிதம் மட்டுமே அம்மா கூட்டுறவு விற்பனை அங்காடி மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.