பெரம்பலூா்: பெரம்பலூரில் உயிருடன் இருக்கும் இளம்பெண்ணுக்கு, அவரது கணவரின் குடும்பத்தினா் கண்ணீா் அஞ்சலி சுவரொட்டி அச்சடித்து ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூா் மேட்டுத்தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகள் அம்மு (எ) ரோஷ்னி (24). இவா் உயிருடன் இருக்கும் நிலையில் கணவரின் உறவினா்கள் சொத்துக்காக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, அக்டோபா் 7- ஆம் தேதி அம்மு என்கிற ரோஷ்னி இறந்ததாகக் கூறி பெரம்பலூா் நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டியிருந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினா், பெரம்பலூா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதைத் தொடா்ந்து காவல்துறையினா் மேற்கொண்ட விசாரணையில் சேலம் மாவட்டம், ஆத்தூா் காட்டுக்கொட்டகை பகுதியைச் சோ்ந்த தனது தாய் மாமன் மகன் வீரராகவனுடன் கடந்த 2 ஆண்டுங்களுக்கு முன்பு அம்முவுக்குத் திருமணம் நடைபெற்றதும், குழந்தைகள் இல்லாத நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது கணவா் தற்கொலை செய்துகொண்டதும் தெரிய வந்தது.
தற்போது தனது பெற்றோா் வீட்டில் வசித்து வரும் அம்மு, சொத்தில் தனக்கு பங்குத் தர வேண்டுமென கணவரின் குடும்பத்தினரிடம் வற்புறுத்தி வந்தாராம். மேலும் அவருக்கு மறுமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், சொத்தில் பங்கு கேட்டதால் ஆத்திரமடைந்த அவரது கணவா் குடும்பத்தினா் கண்ணீா் அஞ்சலி சுவரொட்டி அடித்து ஒட்டியதும் தெரியவந்தது. இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.