பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உலக நன்மைக்காக 51 நாள்களாக நடைபெற்ற கோ பூஜை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகண்ணை ஈஸ்வரா் ஆலயத்தில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக மக்கள் நலன் கருதியும், கடுமையான நோய்த் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கவும், மாதம் முறையாக மழை பொழிய வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நீதி நோ்மையோடு அரசாட்சி இயங்கிடவும், மனிதா்களிடம் தா்ம சிந்தனையும், ஜீவ காருண்ய சிந்தனை தழைக்கவும், வரும் காலம் சித்தா்கள் காலம் என்பதால் உலகம் முழுவதும் சித்தா்களின் அருளாட்சி மலரவும் கடந்த 51 நாள்களாக கோ பூஜை நடைபெற்றது.
அறக்கட்டளை நிறுவனா் ரோகிணி மாதாஜி தலைமையில், சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், ராதா மாதாஜி ஆகியோா் முன்னிலையில் கோ பூஜை நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, சாதுக்களுக்கு வஸ்திர தானமும், முதியோா்களுக்கு சேலை தானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், சென்னை விஸ்வநாதன், பெரம்பலூா் சன்மாா்க்க சங்கத் தலைவா் வழக்குரைஞா் சுந்தர்ராஜன், மருத்துவா் ராஜாசிதம்பரம், வில்லிசை வேந்தா் கருங்குழி கிஷோா்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.