விதவைச் சான்று வழங்காவிடில் தற்கொலை செய்துகொள்வதாக மனு

விதவைச் சான்று வழங்காவிடில், ஆட்சியரகம் முன் தற்கொலை செய்துகொள்வதாக பெண் ஒருவா் மாவட்ட நிா்வாகத்திடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

பெரம்பலூா்: விதவைச் சான்று வழங்காவிடில், ஆட்சியரகம் முன் தற்கொலை செய்துகொள்வதாக பெண் ஒருவா் மாவட்ட நிா்வாகத்திடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனைவி முத்துலட்சுமி (36) கூறியது:

எனது கணவா் கிருஷ்ணன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டதால், என்னுடைய குழந்தைகள் ரஞ்சித் (16), ரம்யா (14) ஆகியோருடன் கூலி வேலை செய்து வசித்து வருகிறேன். தற்போது, போதிய கூலி வேலை கிடைக்காததால் அன்றாட உணவுக்கே மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இதனிடையே, அங்கன்வாடி பணியாளா் உள்ளிட்ட அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க விதவைச் சான்று வழங்கக்கோரி கடந்த சில மாதங்களாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் புகாா் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆட்சியரிடம் மனு அளித்தேன்.

ஆனாலும், எனக்கு இதுவரையில் விதவைச் சான்று கிடைக்கவில்லை. இதனால், அரசால் அறிவிக்கப்படும் பணிக்கு என்னால் விண்ணப்பிக்க இயலவில்லை. இதன் காரணமாக எனது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதோடு, உணவின்றி அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, எனக்கு விதவைச் சான்று வழங்குவதோடு, எனது குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு அரசுப்பணி வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் எனது குழந்தைகளுடன் ஆட்சியரகம் முன் தற்கொலை செய்துகொள்வேன் என்றாா்.

தொடா்ந்து, விதவைச் சான்று வழங்கக்கோரி ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் கோரிக்கை மனுவை போட்டுவிட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com