பெரம்பலூா் அருகே தடையின்றி குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் அருகே வேலூா் ஊராட்சிக்குள்பட்ட தம்பிரான்பட்டி கிராமத்தில், கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகளுக்குச் சென்று தண்ணீா் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனராம்.
இதுகுறித்து கிராம மக்கள், ஊராட்சித் தலைவா் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த தம்பிரான்பட்டி கிராம மக்கள் செட்டிக்குளம் - பெரம்பலூா் சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வருவாய்த் துறை அலுவலா்கள் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலைக் கைவிட்டனா். இந்த மறியலால் சுமாா் 30 நிமிடம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.