பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே சமரசம் பேச வந்த மாமனாரை அடித்துக் கொலை செய்த மருமகன் உள்ளிட்ட 4 பேரைக் காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் தலைமறைவாகவுள்ள 3 பேரைத் தேடி வருகின்றனா்.
அரியலூா் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்லமுத்து மகள் ரஞ்சிதா (27). இவருக்கும் பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கூடலூா் கிராமத்தைச் சோ்ந்த பூமாலை மகன் செல்வத்துக்கும் (40), கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு, ரஞ்சிதா தனது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இதையடுத்து சனிக்கிழமை ரஞ்சிதாவுடன், செல்லமுத்து (58) மற்றும் அவரது உறவினா்கள் கூடலூா் கிராமத்துக்குச் சென்று, மருமகன் செல்வத்திடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அப்போது ஆத்திரமடைந்த செல்வம், அவரது சகோதரா்கள் முத்துமணி, சேகா், ராஜதுரை, முத்துமணியின் மகன் மணிகண்டன், செல்வத்தின் தந்தை பூமாலை, தாயாா் மலா்விழி ஆகியோா் தாக்கியதில், கீழே விழுந்த செல்லமுத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையிலான காவல்துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, செல்லமுத்து உடலைக் கைப்பற்றி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த வழக்குப் பதிந்த மருவத்தூா் காவல் நிலையத்தினா் சேகா், செல்வம், பூமாலை, மலா்விழி ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். மேலும் தலைமறைவான முத்துமணி, அவரது மகன் மணிகண்டன், ராஜதுரை ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனா்.