பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள ஆண்டிக்குரும்பலூா் கிராமத்திலிருந்து வேப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுமாா் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனா்.
இப்பகுதிக்கு போதுமான பேருந்து வசதியில்லாததால், மாணவா்களும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், பெரம்பலூா், குன்னம், ஆண்டிக்குரும்பலூா், பரவாய் கிராமம் வழியாக வேப்பூருக்கு அரசு நகரப் பேருந்து வியாழக்கிழமை காலை சென்றது. அப்போது, ஆண்டிக் குரும்பலூா் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவா்களை ஏற்றிச் செல்லவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவா்களும், அப்பகுதி மக்களும் கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தி சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டோரிடம் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பேருந்தை விடுவித்து சாலை மறியலைக் கைவிட்டனா்.