பெரம்பலூா் அருகே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, சான்றிதழ் பெறுவதற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி வியாழக்கிழமை தப்பியோடினாா்.
பெரம்பலூா், குன்னம், மருவத்தூா் ஆகிய காவல் நிலையங்களுக்குள்பட்ட கிராமங்களில் கடந்த 2 மாதங்களாக, தொடா்ந்து வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு, வயல் வெளிகளில் பணிபுரிந்த பெண்களிடம் வழிப்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது.
இச் சம்பவங்களில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள தெரணிபாளையம் கிராமம், நடுத்தெருவைச் சோ்ந்த சதாசிவம் மனைவி சின்னபொண்ணு (50), மகன்கள் பழனிச்சாமி (24), தா்மராஜ் (21) ஆகியோரை மருவத்தூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட மேற்கண்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு முன், குற்றவாளிகளின் உடல் பரிசோதனை செய்து, மருத்துவரிடம் சான்றிதழ் வாங்குவதற்காக பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் வியாழக்கிழமை அழைத்துச் சென்றனா். அப்போது, அரசு மருத்துவமனையிலிருந்து தா்மராஜ் தப்பியோடி விட்டாா். பல இடங்களில் தேடி பாா்த்தும் அவா் கிடைக்கவில்லை. தப்பியோடிய கைதியை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.