பெரம்பலூா் மாவட்டத்தில் சுகாதார பொறுப்பாசிரியா்களாக நியமிக்கப்பட்டவா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாருக்குச் சொந்தமான 147 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற ஏதுவாக பள்ளிக்கு தலா ஒரு சுகாதார பொறுப்பாசிரியா் வீதம் 147 சுகாதார பொறுப்பாசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கான பயிற்சி வகுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன் தலைமையில் பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, கரோனா பாதுகாப்பு சுகாதார நடவடிக்கைகள், ஊட்டச்சத்து மற்றும் துத்தநாகம் மாத்திரைகள் சாப்பிடும் முறைகள் குறித்து விளக்கமளித்தாா்.
இக்கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலா்கள் மாரிமீனாள் (பெரம்பலூா்), குழந்தைராசன் (வேப்பூா்), மாவட்ட கொள்ளை நோய்க் கட்டுப்பாட்டு அலுவலா் மருத்துவா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.