பெரம்பலூா்: வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கட்சி மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் பிச்சை பாத்திரம் ஏந்தி நூதன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் ஆட்சியரக நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விஸ்வநாதன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதுபோல் சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி ஆகிய விளைபொருள்களை தமிழக அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். உரிமம் இல்லாத போலி பூச்சிக் கொல்லி மருந்து, உரம், போலி விதைகளை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான விதைகளையும், கட்டுப்படியாகக் கூடிய விலையையும் விவசாயிகளுக்கு அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிச்சை பாத்திரம் ஏந்தி விவசாயிகள் முழக்கமிட்டனா்.