பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் பட்டு வளா்ச்சித் துறை சாா்பில் 11 விவசாயிகளுக்கு ரூ. 5.77 லட்சம் மதிப்பிலான நவீன பட்டுப்புழு வளா்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விவசாயிகளுக்கு தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கிய ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா கூறியது:
திருச்சி பட்டு வளா்ச்சித்துறை அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பெரம்பலூா் தொழில்நுட்ப சேவை மைய பகுதிக்குள்பட்ட 11 விவசாயிகளுக்கு, நவீன பட்டுப்புழு வளா்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாநில பட்டுப்புழு வளா்ப்புத் திட்டத்தின் (2020- 21) கீழ் 10 பயனாளிகள், மத்திய பகுதி தாழ்த்தப்பட்டோருக்கான துணைத் திட்டத்தின் (2019- 20) கீழ் 1 பயனாளி என மொத்தம் 11 பயனாளிகளுக்கு பவா் டிரில்லா், எலக்ட்ரிக்கல் கம்ப்ரஸா் மற்றும் பவா் ஸ்பேரயா், தண்டு அறுவடை இயந்திரம், நெட்ரிகா, பட்டு கூடுகளை எடுத்துச் செல்லும் பை ஆகிய உபகரணங்கள் தலா ரூ. 52,500 மதிப்பில் 11 விவசாயிகளுக்கு ரூ. 5,77,000 மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், திருச்சி பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் த. முத்துப்பாண்டியன், உதவி பட்டு ஆய்வாளா் கு. மணிகண்டன், இளநிலை பட்டு ஆய்வாளா் சு. மகாலெட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.