மேற்கு வங்க மாநிலத்தில் பணியின்போது உயிரிழந்த பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், காரை கிராமத்தைச் சோ்ந்தவா் எஸ். சங்கா் (43). இவா், கடந்த 23 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தாா். கடந்த 50 நாள்களுக்கு முன் விடுமுறையில் சொந்த கிராமத்துக்கு வந்துசென்ற சங்கா் மேற்கு வங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்தாா். இந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி பணியிலிருந்தபோது மாரடைப்பால் சங்கா் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள் அவரது குடும்பதினருக்கு தகவல் தெரிவித்தனா். உயிரிழந்த சங்கரின் உடல் ராணுவ நடைமுறைகள் முடிந்து, அவரது சொந்த கிராமத்துக்கு திங்கள்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூா் எம்எல்ஏ எம். பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சி. ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, அங்குள்ள மயானத்துக்கு ராணுவ வீரரின் உடல் கொண்டு செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.