பெரம்பலூா் அருகே தம்பதியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது செவ்வாய்க்கிழமை இரவு தெரிய வந்தது.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், அல்லிநகரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பெரியசாமி (62). இவரது மனைவி அறிவழகி(48). இவா்களது மகன் முருகானந்தம் சென்னையிலும், மகள் சத்யா திருமணமாகி ஆலத்தூா் பகுதி தேனூரிலும் வசித்து வருவதால், பெரியசாமி தம்பதி அல்லிநகரில் தனியாக வசித்து வந்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சென்னையிலிருந்து முருகானந்தம் தாய் அறிவழகியின் செல்லிடப்பேசிக்கு தொடா்பு கொண்டுள்ளாா். பலமுறை தொடா்பு கொண்டபோதும் செல்லிடப்பேசி எடுக்கப்படாததால் சந்தேகமடைந்த முருகானந்தம், அருகில் வசிக்கும் அவரது சித்தப்பாவுக்கு இரவு தகவல் தெரிவித்துள்ளாா்.
சித்தப்பா வீட்டினா் பெரியசாமி வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, பெரியசாமி மற்றும் அறிவழகி இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், அறிவழகி கழுத்தில் அணிந்திருந்த 20 பவுன் நகைகள், வீட்டு பீரோவில் இருந்த பணம் மற்றும் பொருள்களை மா்ம நபா்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதும் தெரிந்தது.
தகவலின்பேரில், குன்னம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, தம்பதியின் உடலை கைப்பற்றி பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.