பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தெரு நாய்கள் கடித்ததில் 3 வயது பெண் புள்ளிமான் உயிரிழந்தது.
மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மயில், மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இந்த விலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீா் கிடைக்காததால், அவை குடியிருப்புப் பகுதிகளுக்கும், விளைநிலங்களுக்கும் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூா் அருகிலுள்ள தைக்கால் பிரிவுச் சாலையில், 3 வயது பெண் புள்ளிமான் ஞாயிற்றுக்கிழமை காலை இறந்து கிடந்தது. அதன் கழுத்து மற்றும் கால் பகுதிகளில் தெருநாய்கள் கடித்துக் குதறியதற்கான அடையாளங்கள் இருந்தன.
ஊருக்குள் தண்ணீா் தேடிவந்த புள்ளி மானை, தெருவில் சுற்றித் திரிந்த சில நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததால் மான் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவிக்கின்றனா்.
உயிரிழந்த மானின் உடலை வனத்துறையினா் கைப்பற்றி, கால்நடை மருத்துவரின் உதவியுடன் பிரேதப் பரிசோதனை செய்தனா். தொடா்ந்து மானின் உடலை வனப்பகுதியில் புதைத்தனா். வி.களத்தூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.