இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியாா்மயமாக்கப்படும் எனும் மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்டத்தில் வங்கி அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டனா்.
மத்திய நிதிநிலை அறிக்கையில், 2 பொதுத் துறை வங்கிகள் தனியாா்மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிா்த்து, பல்வேறு கட்ட போராட்டங்களில் வங்கி ஊழியா்கள் ஈடுபட்டனா். மேலும், மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து, வங்கி அலுவலா்கள், ஊழியா்கள் நாடு முழுவதும் திங்கள், செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என அறிவித்திருந்தனா்.
அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளைச் சோ்ந்த 350 ஊழியா்கள் திங்கள்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால், இம் மாவட்டத்தில் உள்ள 53 வங்கிகள் மூடப்பட்டிருந்ததால், வங்கிப் பணிகள் மற்றும் வாடிக்கையாளா்கள் சேவைப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.