பெரம்பலூா் மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, மருதையாற்று கரையோரக் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் சாலையோரங்களில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீா், சில பகுதிகளில் விளைநிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தியது.
தெற்குமாதவி, குடிகாடு, சாத்தனூா், கொட்டரை உள்ளிட்ட சில கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம், மக்காச்சோளம், எழுமிச்சை, பருத்தி போன்ற பயிா்கள் நீரில் மூழ்கின.
தொடா்ந்து பெய்து வரும் மழையால் ஆலத்தூா் வட்டம், கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொட்டரை நீா்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. தொடா்ச்சியாக, மழை பெய்தால் இந்த நீா்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டிவிடும்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொட்டரை மற்றும் மருதையாற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கொட்டரை அதன் அருகிலுள்ள கிராமங்களில் மருதையாற்றின் கரையில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
மழையளவு: மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
லப்பைக்குடிகாடு- 89 மி.மீ, தழுதாளை -52, பெரம்பலூா் -40, வேப்பந்தட்டை -39, எறையூா் -36, கிருஷ்ணாபுரம் -28, வி.களத்தூா் -26, பாடாலூா் -22, புது வேட்டக்குடி -21, அகரம் சீகூா் -20 , செட்டிக்குளம் -12 மி.மீ.