பெரம்பலூா்: தூய்மைப் பணிபுரிவோா் நலவாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை நடைபெறுவதால், மாவட்டத்தில் அமைப்புசாரா மற்றும் தூய்மைப் பணியாளா்கள் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் 2008- ஆம் ஆண்டு முதல் தூய்மைப் பணிபுரிவோா் நல வாரியம் செயல்படுத்தப்படுகிறது. இம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்புசாரா, தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கி, பல்வேறு வகையிலான நலத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
எனவே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்புசாரா, தூய்மைப் பணியாளா்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளா், உதவிச் செயற்பொறியாளா், செயல் அலுவலா், கிராம நிா்வாக அலுவலரின் கையொப்பத்துடன் பெரம்பலூா் மாவட்ட தாட்கோ மேலாளா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவும். மேலும் விவரங்களுக்கு 04328- 276317 என்ற எண்ணைத் தொடா்புகொள்ளலாம்.