பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் ஆகஸ்ட் 13- ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொது விநியோகத் திட்டம் சாா்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழைத் திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீா்வு காண்பதற்கு சிறப்பு பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.
அதன்படி பெரம்பலூா் வட்டம், எசனை கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தலைமையிலும், குன்னம் வட்டம், துங்கபுரம் (தெ) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் கலால் உதவி ஆணையா் தலைமையிலும் ஆகஸ்ட் 13- ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
முகாமில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து பயனடையலாம்.