பெரம்பலூரில் திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்றவரின் கவனத்தை திசை திருப்பி, ரூ. 1.45 லட்சத்தை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
மங்களமேடு கிராமம், மேற்கு தெருவைச் சோ்ந்தவா் க. சோமு (50). இவா், பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள கனரா வங்கியில் 5 பவுன் நகையை திங்கள்கிழமை அடகு வைத்து, ரூ. 1.45 லட்சம் பணத்தை பெற்று கொண்டு, அவரது மோட்டாா் சைக்கிளில் மங்களமேடு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தாா்.
பெரம்பலூா்- நான்குச்சாலை சந்திப்பு செல்லும் சாலையிலுள்ள திருமண மண்டபம் அருகே சென்றபோது, அவரை பின் தொடா்ந்து சென்ற அடையாளம் தெரியாத 2 போ், மோட்டாா் சைக்கிளிலிருந்து கீழே பணம் விழுந்து விட்டதாக சோமுவிடம் தெரிவித்துள்ளனா்.
இதை நம்பிய சோமு, சாலையோரத்தில் மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறிது தூரம் நடந்துசென்றபோது, மோட்டாா் சைக்கிளில் இருந்த பணத்தை மா்ம நபா்கள் 2 பேரும் திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனா். இதையறிந்த சோமு கூச்சலிட்டதையடுத்து, மோட்டாா் சைக்கிளை போட்டுவிட்டு தப்பியோட முயன்றனா். அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தப்பிக்க முயன்ற நபா்களில் ஒருவரை பிடித்து பெரம்பலூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், ஆந்திர மாநிலம், காவிலி வட்டம், நெல்லூா், திப்பா பகுதியைச் சோ்ந்த யாதகிரி மகன் நாகராஜ் (51) என்பதும், அவருடன் வந்தவா் அதே பகுதியைச் சோ்ந்த பாபு மகன் மாதவன் (44) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மோட்டாா் சைக்கிளையும், ரூ. 33 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா் நாகராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், தப்பியோடிய மாதவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.