பெரம்பலூா் மாவட்டம், சிறுவயலூரில் கோயில் திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்க கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை அருகிலுள்ள சிறுவயலூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் அளித்துள்ள புகாா் மனு:
சிறுவயலூா் கிராமத்தில் எனது தந்தை பெரியசாமி பொதுமக்களிடம் பணம் வசூலித்து, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன், செல்லியம்மமன், கம்பப் பெருமாள் கோயில்களைக் கட்டி குடமுழுக்கு விழாவை நடத்தினாா்.
தொடா்ந்து எனது தலைமையில் 3 முறை குடமுழுக்கு நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. கோயில் கட்டியது முதல் பரம்பரையாக பூஜை செய்வது, கரகம் எடுப்பது, திருவிழா நடத்துவது, வரவு- செலவு தாக்கல் செய்வது உள்ளிட்ட பணிகளை எனது குடும்பத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் எந்தவித சம்பந்தமுமில்லாத சட்டத்துக்கு புறம்பாக, பாரம்பரிய வழக்கு முறைக்கு எதிராக எங்களை மிரட்டி, 3 போ் கோயில்களைக் கைப்பற்றி ஜூலை 12-ஆம் தேதி திருவிழா நடத்த முயற்சிக்கின்றனா். எனவே, கோயில் திருவிழாவை நடத்த தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.