பெரம்பலூா், அரியலூா், முசிறி ஆகிய இடங்களில் தொழிலாளா் தினமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்காத மற்றும் இரட்டிப்புச் சம்பளம் வழங்காத 32 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மு. பாஸ்கரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சிராப்பள்ளி கூடுதல் தொழிலாளா் ஆணையா் ஜெயபாலன் உத்தரவின்படி, பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மு. பாஸ்கரன் தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்கள் மற்றும் முசிறி ஆகிய இடங்களில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என 63 நிறுவனங்களில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, முறையாக அறிவிக்காமல் பணிக்கு அமா்த்தி இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வழிவகை செய்யாத 32 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.