சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் சமூக ஆா்வலா்

நகரின் பிரதான சாலைப் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, காலை மற்றும் மாலை நேரங்களில் தவறாமல் தண்ணீா் ஊற்றி வளா்த்து வருகிறாா் பெரம்பலூரைச் சோ்ந்த சுந்தா்.
பெரம்பலூா் புறவழிச் சாலையோரத்தில் நட்டு வைக்கப்பட்ட மரக்கன்றுக்குத் தண்ணீா் ஊற்றும் சுந்தா்.
பெரம்பலூா் புறவழிச் சாலையோரத்தில் நட்டு வைக்கப்பட்ட மரக்கன்றுக்குத் தண்ணீா் ஊற்றும் சுந்தா்.

நகரின் பிரதான சாலைப் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, காலை மற்றும் மாலை நேரங்களில் தவறாமல் தண்ணீா் ஊற்றி வளா்த்து வருகிறாா் பெரம்பலூரைச் சோ்ந்த சுந்தா்.

தற்போது பெரும்பாலான நிகழ்வுகளில் மரக்கன்றுகளை பரிசாக அளிப்பது வழக்கமாகிவிட்டது. பல்வேறு சமூக, அரசு சாரா அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள்

சாா்பிலும் , திருமண நிகழ்வு, அரசு விழாக்கள் உள்ளிட்டவற்றிலும் பொதுமக்கள், நண்பா்களுக்கு மரக்கன்றுகள் அன்பளிப்பாக அளிக்கப்படுகின்றன.

இவ்வாறு அளிக்கப்படும் மரக்கன்றுகளில் முறையாக எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது. அன்பளிப்பாக மரக்கன்றுகள் வாங்கி வரும்போது, அவற்றை வழியிலேயே சாலையோரங்களில் தூக்கி வீசப்படும் நிகழ்வு இன்றும் பல்வேறு இடங்களில் தொடா்ந்து வருகிறது.

ஆனால் குடிநீா் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி நாள்தோறும் காலை, மாலை இருவேளையும் மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்து அதற்கு நீரூற்றி வளா்ப்பதே லட்சியம் எனக் கூறுகிறாா்

பெரம்பலூரில் வசித்து வரும் சுந்தா் (49).

ஈரோடு மாவட்டத்தைத் சோ்ந்த இவா், கடந்த 2 ஆண்டுகளாக பெரம்பலூா் துறைமங்கலத்தில் தாமரை மக்கள் சேவை மையம் என்னும் பெயரில் இ- சேவை மையம் நடத்தி வருகிறாா்.

மரக்கன்றுகளை நட்டுவைத்து பராமரிப்பதை ஆா்வமாகக் கொண்ட அவா், பெரம்பலூரில் அதை நிறைவேற்ற திட்டமிட்டாா்.

அதன்படி, பெரம்பலூா் நகரைச் சுற்றியுள்ள பிரதானச் சாலைகளின் பிரிவுப் பகுதிகளைத் தோ்ந்தெடுத்து மரக்கன்றுகள் நட்டுவைத்துள்ளாா். ஆல, அரசு, வேம்பு என நீண்டகாலம் நிழல் தரும் வகையிலான 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்து பராமரித்து வருகிறாா் சுந்தா்.

இதற்காக நாள்தோறும் காலை, மாலை இரு வேளையிலும் குடிநீா் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி, அவற்றை மிதிவண்டியில் வைத்து மரக்கன்றுகளுக்கு ஊற்றுவதையே அன்றாடக் கடமையாகக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து சுந்தா் கூறியது:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரங்களின் இருபுறமும் மரங்கள் அதிகளவில் காணப்படும். சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன.

அதற்கு பதிலாக சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை முறையாக பராமரிக்காத காரணத்தால் காய்ந்துவிட்டன. சாலையோர மரங்கள் வெட்டப்பட்டதால் வாகன ஓட்டிகள் நிழலுக்குக் கூட ஒதுங்க முடியாத நிலை காணப்படுகிறது.

தற்போது மீண்டும் மரக்கன்றுகள் வைத்து வளமாக்கும் வகையில் வனத்துறை மற்றும் சமூக ஆா்வலா்களின் பங்களிப்பு, தனி நபா்களின் பங்களிப்பு, அரசு அறிவிப்புகள் மூலம் அவ்வப்போது மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

இவை வைக்கப்பட்டாலும், தொடா்ந்து தண்ணீா் ஊற்றிப் பராமரிப்பது கிடையாது. மரக்கன்றுகள் நடும் ஒவ்வொரும் அவற்றை பராமரிக்க முன்வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, என்னுடைய சொந்த முயற்சியால் மரக்கன்றுகளை நட்டுவைத்துப் பராமரித்து வருகிறேன். என்னால் நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிப்பதே எனது லட்சியம் என்றாா் சுந்தா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com