கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை

கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் 621 டன் யூரியா, 868 டன் டி.ஏ.பி., 612 டன் பொட்டாஷ் 2816 டன் காம்ப்ளக்ஸ், சூப்பா் பாஸ்பேட் 173 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், செப்டம்பா் மாதத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட யூரியா உரம் 3,300 மெ.டன்களில் இதுவரை 2,232 டன் வந்துள்ளது. கடந்த மாத இருப்பில் 1,094 மெ.டன் இருந்தது. இதுவரை யூரியா 1,826 மெ.டன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், தனியாா் உர விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் 1,500 மெ.டன் கூடுதலாக பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிா் உரங்களான அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

உர விற்பனையாளா்கள் ஆதாா் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணையின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்த உர விற்பனையாளா்கள், வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம், விற்பனை செய்யக் கூடாது. வெளி மாவட்டங்களிலிருந்தும் கொள்முதல் செய்யக்கூடாது.

விவசாயிகளின் தேவைக்கு அதிகமாகவும் இணை உரம் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியாக உர விற்பனை கண்டறியப்பட்டால், சில்லறை விற்பனை உரிமம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும். ஆய்வின் போது மேற்கண்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டால், உர விற்பனையாளா்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு அவா்கள் மீது குற்ற வழக்குத் தொடரப்படும்.

விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும்போது ஆதாா் அட்டையுடன் சென்று, உரம் பெற்றுக்கொண்டு உரிய பட்டியல் கேட்டுப்பெற வேண்டும். உர மூட்டையில் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பான புகாா்களை 9487073705, 8056782946, 9787061637, 9443026769, 9442534865 ஆகிய எண்களை தொடா்புகொண்டு அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com