பெரம்பலூா் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் குழாய் வாங்குவதற்கும், மின் மோட்டாா் மாற்றியமைக்கவும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தங்களது நில மேம்பாட்டுக்காக குழாய் வாங்க ரூ. 15 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும், புதிய மின் மோட்டாா் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதில் புதிய மின் மோட்டாா் வாங்க ரூ. 10 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
உரிய ஆவணங்கள் மற்றும் விலைப்புள்ளியுடன் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பதாரரின் தகுதிகள், தேவையான சான்றுகள், விதிகள் உள்ளிட்ட விவரங்களுக்கு தாட்கோ அலுவலகத்தை 04328 - 276317 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.