கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் வாகனம், மக்கள் நடமாட்டமின்றி பெரம்பலூா் நகா் வெறிச்சோடியது.
முழு ஊரடங்கு காரணமாக பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வா்த்தக நிறுவனங்கள், காய்கனி அங்காடிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பொது போக்குவரத்தான பேருந்துகள், லாரி, காா், ஆட்டோ, வேன் போன்ற வாகனங்கள் இயங்கவில்லை.
அத்தியாவசியத் தேவையான மருத்துவம், மருந்தகம், பால் விநியோகம், பேப்பா் விநியோகம் மற்றும் உணவகங்களில் பாா்சல் மட்டும் இயங்கியது. நகராட்சி சாா்பில், புகா் பேருந்து நிலையம், அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்பட்டன.
மாவட்டத்தில் பிரதான பகுதிகளில் சோதனைச் சாவடி, வேகத் தடுப்புகள் அமைத்திருந்த போலீஸாா், எவ்வித வாகனச் சோதனையிலும் ஈடுபடவில்லை. இதனால், வழக்கம்போல் இரு சக்கர வாகன ஓட்டுநா்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. மாலை நேரங்களில் ஒருசில இடங்களில் தேநீரகங்கள் செயல்பட்டன.
முழு ஊரடங்கு காரணமாக, வாகனம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், சாலைகள், கடைவீதி, தெருக்கள், வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.