பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் திட்டத்தின்கீழ் நிதியுதவி, கடனுதவி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டத்தின் மூலம் தனிநபா் அடிப்படையில், ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப் படுத்துதல், தொழில்நுட்பப் பயிற்சிகள் உள்ளிட்ட இனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
மேலும், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும். இத் திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். மேலும், சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தொழில்கடன் வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.
எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் புதிதாக உணவுப் பதப்படுத்தும் தொழில் தொடங்க விருப்பமுள்ள தொழில்முனைவோா்கள் இத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயன்பெறலாம்.