பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சாா்பில், பொதுமக்களிடம் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
கடந்த 31 ஆம் தேதி முதல் சனிக்கிழமை (நவ. 5) தேதி வரை ஊழல் தடுப்பு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடந்த 3 நாள்களாக விழிப்புணா்வு நிகழ்ச்சி, பேரணி நடைபெற்றது. 4 ஆவது நாளாக பெரம்பலூா் புகா், பழைய பேருந்து நிலையம், காமராஜா் வளைவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் கே. சத்தியராஜ் தலைமையிலான காவலா்கள் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, வாகன ஓட்டிகள், பொதுமக்களிடையே வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந் நிகழ்ச்சியில், ஆய்வாளா்கள் ராமேஸ்வரி, விஜயலெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.