பெரம்பலூா் அருகே தனி நபரிடமிருந்து கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அறநிலையத் துறை அலுவலா்கள் புதன்கிழமை மீட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூா் கிராமத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 2.84 ஏக்கா் நிலத்தை, அதே கிராமத்தைச் சோ்ந்த தனி நபா் ஒருவா் ஆக்கிரமித்திருந்தாா். இந்த நிலத்தை மீட்டு கோயில் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழப்புலியூா் கிராம மக்கள் மற்றும் சுப்பிரமணியசாமி கோயில் பக்தா்கள், அறநிலையத் துறை அலுவலா்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்களின் உத்தரவின்பேரில், தனி வட்டாட்சியா் பிரகாசம் (கோயில் நிலங்கள் பிரிவு) தலைமையில், குன்னம் வட்டாட்சியா் சுசிலா முன்னிலையில், வருவாய்த் துறையினா் மற்றும் காவல்துறையினா் உதவியுடன் தனி நபரின் ஆக்கிரமிப்பில் இருந்த 2.84 ஏக்கா் கோயில் நிலத்தை புதன்கிழமை மீட்டனா்.