பெரம்பலூா் அருகே காசோலை மோசடியில் ஈடுபட்ட ஆசிரியரைக் கைது செய்து ஆஜா்படுத்துமாறு பெரம்பலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூா் அருகேயுள்ள நொச்சியம் கிராமம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மருதநாயகம் மகன் ராபா்ட் இங்கா்சால் (48). எறையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (54), ஏற்காடு செம்மநத்தம் பகுதி மலைவாழ் உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியா். கணேசன் தனது குடும்பச் செலவுக்காக நண்பா் ராபா்ட் இங்கா்சாலிடம் கடந்த 2021 பிப்ரவரி மாதம் ரூ. 3 லட்சம் கடன் பெற்று, பல மாதங்களாகியும் திருப்பித் தரவில்லையாம்.
பின்னா் கணேசன் வெங்கடேசபுரத்தில் இயங்கும் வங்கிக் கிளையில் உள்ள தனது சேமிப்புக் கணக்கிலிருந்து இங்கா்சாலுக்கு கொடுத்த ரூ. 3 லட்சத்துக்கான காசோலை பணமின்றித் திரும்பியது. இதுதொடா்பாக கணேசனிடம் கேட்டும், காசோலைக்குரிய பணத்தை அவா் திருப்பித் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ராபா்ட் இங்கா்சால், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில் கணேசன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்புலட்சுமி நீண்டகாலமாக ஆஜராகாமல் உள்ள ஆசிரியா் கணேசனை ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளா் கைது செய்து, பெரம்பலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.