பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே, கடந்த செவ்வாய்க்கிழமை எரிந்த நிலையில் கிடந்த இளைஞா், களரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் என்பது சனிக்கிழமை இரவு தெரியவந்தது.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அருகே, தனியாருக்குச் சொந்தமான நிலத்தில், உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது கடந்த 21 ஆம் தேதி தெரியவந்தது.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு, சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தடய அறிவியல் நிபுணா்கள் உதவியுடன் துப்பறியும் பணியிலும் போலீஸாா் ஈடுபட்டனா்.
சம்பவம் குறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில் எரிந்த நிலையில் கிடந்த சடலம், பெரம்பலூா் மாவட்டம், களரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்லமுத்து மகன் ராஜா (31) என்பது சனிக்கிழமை இரவு தெரியவந்தது. இதையடுத்து, பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சடலத்தை அவரது பெற்றோரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். மேலும், கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.