மக்காச்சோளம், சின்ன வெங்காயம், பருத்தி ஆகியவற்றை கொள்முதல் செய்ய, நடமாடும் கொள்முதல் நிலையம் ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அரங்கில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
விவசாய சங்க நிா்வாகி ராமராஜன்: இடைத்தரகா்கள் தலையீடு காரணமாக உரிய விலை கிடைக்காமலும், எடை மோசடியாலும் மக்காச்சோள விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க இளைஞரணிச் செயலா் வீ. நீலகண்டன்:
வேலை உறுதித் திட்டத்தில் புதிய பயனாளிகளை சோ்க்கவும், அத் திட்ட பணியாளா்களை விவசாயத் தொழிலில் ஈடுபடுத்தவும் உத்தரவிட வேண்டும். மேலும், பிரதமரின் கிஸான் திட்ட உதவித் தொகை பெறுவதற்கு புதிய பயனாளிகளை சோ்க்க நடவடிக்கை வேண்டும்.
பசும்பலூா் ராஜூ : மக்காச்சோளம் கொள்முதலில் தனியாா் நிறுவனங்கள் எடை மோசடியில் ஈடுபடுகின்றனா். இதைத் தடுக்க பல்துறை அலுவலா் குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்டு எடை மோசடியில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயி வரதராஜன்: விவசாயிகளின் நலன்கருதி வேளாண் பணிகளை எளிதாக மேற்கொள்ளும் இயந்திரங்களின் எண்ணிக்கையை வேளாண் பொறியியல் துறை அதிகரிக்க வேண்டும். விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், அனைத்துத்துறை அரசு உயா் அலுவலா்களும் பங்கேற்று விவசாயிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு பதில் மற்றும் தீா்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன்: அகரம் சீகூரில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீ. ஜெயராமன்:
விவசாயிகளின் நலன் கருதி, திருச்சி மாவட்டம், முசிறியிலிருந்து துறையூா் வழியாக பெரம்பலூா் மாவட்டத்துக்கு கால்வாய் மூலம் காவிரி நீா் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். செல்லதுரை:
மாவட்டத்தில், அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை கொள்முதல் செய்ய நடமாடும் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும்.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, வேளாண்மை இணை இயக்குநா் ச. கருணாநிதி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் பாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பொ. ராணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.