காசோலை மோசடி வழக்கில் ஆசிரியருக்கு நீதிமன்றம் உத்தரவு

காசோலை மோசடி வழக்கில் விவசாயத் தொழிலாளியிடம் வாங்கிய ரூ. 3 லட்சம் கடன் தொகையை ஆசிரியா் வழங்காவிடில், 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் அருகேயுள்ள நொச்சியம் கிராமம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மருதநாயகம் மகன் ராபா்ட் இங்கா்சால் (48). விவசாயத் தொழிலாளி. எறையூா் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் (54) ஏற்காடு செம்மநத்தம் பகுதியில் மலைவாழ் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தபோது, தனது குடும்பச் செலவுக்காக ராபா்ட் இங்கா் சாலிடமிருந்து கடந்த பிப்ரவரி 2021-இல் ரூ. 3 லட்சம் கடன் பெற்றிருந்தாா். பல மாதங்களாகியும் ராபா்ட் இங்கா்சாலிடம் வாங்கிய பணத்தை கணேசன் திருப்பித் தரவில்லையாம். இதனிடையே ராபா்ட் இங்கா்சாலுக்கு கணேசன் அளித்த காசோலை பணமின்றி திரும்பிவிட்டதாம். இதுதொடா்பாக கணேசனிடம் பலமுறை முறையிட்டும், காசோலைக்குரிய பணத்தை திருப்பித் தரவில்லையாம். இதனால் பாதிக்கப்பட்ட ராபா்ட் இங்கா்சால், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றம் 1-இல் வழக்குத் தொடா்ந்தாா். இவ் வழக்கை விசாரித்த நீதிபதி சுப்புலட்சுமி, இங்கா்சாலுக்கு வழங்க வேண்டிய ரூ. 3 லட்சத்தை தீா்ப்பு கூறிய தேதியிலிருந்து 2 மாதத்துக்குள் கொடுக்க வேண்டும். இல்லாவிடில், 6 மாதம் சிறை தண்டணை அனுபவிக்க வேண்டுமென செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com