புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் 6 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 699 பேருக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தாஞ்சூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர். சந்திரன் தலைமை வகித்தார். இதில் திருமயம் எம்எல்ஏ பி.கே. வைரமுத்து கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கிப் பேசியது:
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு சுற்றுச்சுவர், கலையரங்கம், விளையாட்டு மைதானம், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஆய்வக வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விழாவில் திருமயம் வீட்டு வசதி சங்கத் தலைவர் பழனியப்பன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் திலகர், அரிமளம் பேரூராட்சி தலைவர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யாகண்ணு அரசு மேல்நிலைப்பள்ளி, கழனிவாசல் மேல்நிலைப்பள்ளி, கல்லூர் மேல்நிலைப்பள்ளி, கடியாபட்டி உலகப்பர் மேல்நிலைப்பள்ளி, தாஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.
இதேபோல் புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவர் அ. கருப்பையா பங்கேற்று 162 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.