கடந்த ஓராண்டுக்கும் மேலாக சாலை விளக்குகள் பொருத்தப்படாததால் பல்வேறு போராட்டம் மேற்கொண்டதன் விளைவாக, கந்தர்வகோட்டை கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
கந்தர்வகோட்டை ஊராட்சியில் பெரம்பலூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையின் கந்தர்வகோட்டை புதிய பேருந்து நிலையம் - புதுகை சாலை செட்டியார் குளம் வரையிலான சாலையின் மையப்பகுதியில் தடுப்பு சுவர் எழுப்பி எல்இடி விளக்கு கம்பங்கள் ஊன்றப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக விளக்குகள் பொருத்தப்படாமல் இருந்தன.
இதுகுறித்து கந்தர்வகோட்டையில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்துதல், மின் கம்பத்தில் அரிக்கன் விளக்கு கட்டுதல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், எல்இடி விளக்குகளுக்கு திங்கள்கிழமை இரவு மின் இணைப்பு வழங்கப்பட்டு விளக்குகள் பிரகாசமாக ஜொலிக்கின்றன. இதனை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ரசித்துச் செல்கின்றனர்.