புதுக்கோட்டை அருகே மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டையில் இருந்து அரிமளம் செல்லும் சாலையில் அன்னசத்திரம் பகுதியில் அரசு மதுக்கடை உள்ளது. புதுக்கோட்டை புறநகரில் உள்ள இந்தக் கடையையும் அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அன்னசத்திரம் பகுதியில் மதுக்கடை அருகே பதுக்கி வைத்து மது விற்கப்படுவதாக புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, புதுகை வட்டாட்சியர் செந்தமிழ்க்குமரன், காவல் ஆய்வாளர் பி. தமிழ்மாறன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அன்னசத்திரம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பதுக்கி வைத்து மது விற்ற திருமயம் வட்டம், அரங்கினான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பி. சித்தார்த்தன்(21) என்பவரைப் பிடித்து அவரிடமிருந்த 81 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, புதுகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து மதுவிலக்குப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.