பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொப்பனாபட்டி ஊராட்சியில் கடந்த சில நாள்களாக ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திங்கள்கிழமை காலை காலிக்குடங்களுடன் புதுக்கோட்டை- பொன்னமராவதி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லில் மழையின்றி நீர்மட்டம் குறைந்துவிட்டதால், ஊராட்சிக்கு உள்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் மாற்றி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. விரைவில் இந்நிலை சரிசெய்யப்படும் என ஊராட்சி செயலர் அளித்த உறுதியின்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.