தமிழக அரசின் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்ட நிதியுதவி கிடைக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் அருகே தென்னங்குடியைச் சேர்ந்த பாண்டியன் அளித்துள்ள மனு:
என் மனைவிக்கு கடந்த 2002 ஆம் ஆண்டில் ஒரு பெண் குழந்தையும், 2005 ஆம் ஆண்டில் மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தது. இதைத்தொடர்ந்து, என் மனைவிக்கு அரசு விதிமுறைப்படி புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், பெண் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய அரசின் வைப்புத்தொகை வங்கிக் கணக்கில் இதுவரை வரவு வைக்கப்படவில்லை. இதுகுறித்து குன்றாண்டார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கேட்டபோது சரியான விளக்கம் அளிக்கவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து அரசின் திட்டப் பயன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.