விபத்தில் இறக்கும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் மாவட்ட துணைத் தலைவர் அய்யாத்துரை தலைமையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தில்லியைப் போல கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கான முழுக் கல்விச் செலவையும் வாரியமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆண் தொழிலாளர்களுக்கு 60 வயதிலும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதிலும் மாத ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். விபத்து மரணத்துக்கு ரூ. 10 லட்சமும், இயற்கை மரணத்துக்கு ரூ. 5 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வுக்கான உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் பொதுச் செயலர் கே.ஆர். தர்மராஜன் நலவாரியத்தின் செயல்பாடுகளை விளக்கிப் பேசினார். செயலர் பாலச்சந்திரன் வேலையறிக்கை வாசித்தார். மாவட்ட துணைத் தலைவர் த. செங்கோடன் தொடக்கவுரையாற்றினார்.
மாநிலச் செயலர் தில்லைவனம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கட்டுமானத் தொழிலாளர்களின் எதிர்காலம் குறித்து பேசினார். தொடர்ந்து, பேரவைத் தலைவராக கணணன், செயலராக பாலச்சந்திரன், பொருளாளராக கணேசன், துணைத் தலைவராக தர்மராஜன் துணைச் செயலராக அய்யத்துரை ஆகியோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.