பொன்னமராவதி அரசு பாப்பாயி மருத்துவமனையில் மனநோய் மருத்துவப்பிரிவு திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
விழாவுக்கு தலைமை மருத்துவர் டி. சதாசிவம் தலைமை வகித்தார். விழாவில் பங்கேற்று மனநோய் மருத்துவர் கார்த்திக் தெய்வவிநாயகம் பேசியது: இன்று மக்களிடையே மனநோய் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. மனநோய் என்பது பில்லி சூன்யம், ஆவிகளால் ஏற்படுவதல்ல. பதட்டம், பயம், கவலை, தாழ்வு மனப்பான்மை, தூக்கமின்மை, நகைச்சுவை உணர்ச்சி இன்மை ஆகியவையும் மனநோயின் அறிகுறிகளாகும். மன அழுத்தத்தினால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் நேரிடும். மாந்திரிகம், ஆவிஇறங்குதல் போன்றவை மனநோயைக் குணப்படுத்தும் வழிமுறைகள் அல்ல. இந்தப் பிரச்னைகளுக்கு மனநோய் மருத்துவரின் ஆலோசனை பெற்றால் போதுமானது. மனநோய் முற்றிலும் குணமடையக்கூடியதாகும்.
மாவட்ட மன நல திட்டத்தின் கீழ் பொன்னமராவதி அரசு பாப்பாயி மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் 2 ஆவது திங்கள்கிழமை மனநோய் மருத்துவப் பிரிவு செயல்பட உள்ளது. அதன்படி மனநோய் மருத்துவர் பரிசோதனை செய்து, ஆலோசனைகள் மற்றும் மாத்திரைகள் வழங்க உள்ளார். மனநோய் மருத்துவத்தை பொறுத்தவரையில் நீங்கள் சென்னை, அமெரிக்கா சென்றாலும் கூட இங்குள்ள மருத்துவ முறையே, மாத்திரைகளே அங்கும் வழங்கப்படும். எனவே மனநோய் சிகிச்சை பெறுவர்களின் அலைச்சலைக் குறைக்கும் வகையில் உங்களை நாடி பொன்னமராவதி வந்துள்ள மனநோய் மருத்துவச் சேவையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். மருத்துவர்கள் சரவணன், மேனகா, அஸ்வினி ரஞ்சிகா மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.